இந்தியாவில் பேஸ்புக்கை பாஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துவதாக நேற்று ராகுல் கூறிய குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் பத்திரிக்கை “பாஜ., தலைவர்களின் வெறுப்பு பிரசாரத்தை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை “ என்று ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது. இதை சுட்டிக்காட்டிய காங்., எம்.பி., ராகுல், ‛இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்ஆப்பை பாஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது,' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. ‛யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், பேஸ்புக் பாரபட்சமற்ற தனது கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது,' என விளக்கமளித்துள்ளது.